Wednesday, May 15, 2013

ராசராசனின் அரண்மனை இருந்த இடம் எது?





தற்பொழுது தஞ்சையில் உள்ள அரண்மனை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. அரண்மனையை சூழ்ந்துள்ள நான்கு ராசவீதிகள்,கோட்டை ,அகழி, சூழ்ந்த நகரமே சோழர்கால அரண்மனை இருந்த பகுதி என்று கருதுவது தவறாகும். இன்றைய தஞ்சாவூர் சோழர்காலத் தஞ்சையின் ஒருபகுதியேயாகும். சோழர்கால அரண்மனை தஞ்சை ராஜராஜேச்சரத்திற்கு வடமேற்கே உள்ள சீனிவாசபுரம் சிங்கபெருமாள் குளம் செக்கிமேடு போன்ற பகுதியில் தான் இருந்திருக்க வேண்டும் என்பதை தொல்லியியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர் இதனை மெய்பிக்கும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு தடையம் கிடைத்தது.


1989 ஆம் ஆண்டு தஞ்சாவூர் சீநிவாசபுரதிற்கு அருகில் உள்ள ராசராசன் நகரில் ஒரு தனியார்க்கு வீடுகட்ட ஒப்பந்தகாரர் ஒருவர் கடைகால் தோண்டினார் அப்பொழுது 10 அடி ஆழத்திற்கு மிக நீண்ட கற்றூண் ஒன்று கல்வெட்டுகளுடன் புதைந்து இருந்தது. கல்வெட்டுகளின் முக்கியத்துவம் உணராத அந்த ஒப்பந்தகாரர் அந்த தூணை 70 துண்டுகளாக உடைத்து, கட்டுமானத்திற்கு பயன்படுத்த தயாராகிவிட்டார் அப்பொழுது இந்த தூணின் அருமை அறிந்த சிலர் அகழ்வாராய்ச்சியாளர் திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் இந்து பத்திரிகையின் நிருபர் திரு வி .கணபதி அவர்களுக்கும் தகவல் அளித்தனர். இவர்கள் இருவரும் உடனே சென்று பார்த்து அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் மச்சேந்திரநாதன் அவர்களின் உதவியுடன் உடைந்த கல் துண்டுகளை கைப்பற்றினார். பிறகு முனைவர் இரா. நாகசாமி இத்துண்டுகளை படித்து இக்கல்வெட்டின் முக்கியத்துவத்தை அறிவித்தார். 


தமிழக மற்றும் இந்திய தொல்லியியல் துறையினர் இக்கல்வெட்டின் துண்டுகளை படியெடுத்து பதிவுசெய்தனர், இப்பொழுது அந்த கல்தூண் தஞ்சை ராஜராஜசோழன் மணிமண்டபத்தில் உள்ள ராசராசன் அருகாட்சியகத்தில் உள்ளது (படத்தை காண்க ) 


இதற்கு முன் கிடைத்த அனைத்து கல்வெட்டுகளும் திருகோவில்களுக்கும் மற்ற அரசு நடவடிக்கைக்கு உரிய சாசனங்கலே, ஆனால் தஞ்சையில் கிடைத்துள்ள இக்கல்வெட்டுப் பாடல்களோ ராசராசனின் புகழை மட்டுமே பாடபடுபவையாக உள்ளன.மேலும் அவரது பிற பட்டபெயர்களை கூறாது மும்மூடிசோழன் என்றே புகழ்கிறது.இக்கல்வெட்டு இடம்பெற்ற இந்த கல்தூண் அவனது அரண்மனையில் தான் இருந்திருக்க வேண்டும் என உறுதியாக நம்பலாம் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள பாடல்களை பற்றி அடுத்த பதிவில் பார்போம் 


மேற்கூறிய செய்தி குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் "தஞ்சாவூர்" நூலில் இருந்து எடுக்க பட்டது